பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் நீட் தேர்வு மையத்தில் கொடுக்கும் படிவத்தை சமர்ப்பித்து தேர்வெழுதலாம்: தேசிய தேர்வு முகமை தகவல்

சென்னை: நீட் தேர்வெழுத பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் மாணவர்கள் அங்கு கொடுக்கும் படிவத்தை சமர்ப்பித்து தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என என்.டி.ஏ அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்கபல அடுக்கு சரிபார்ப்பு நடைபெறும். இதில் பயோமெட்ரிக் (Biometric) சரிபார்ப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆள்மாறாட்டத்தை தடுக்க இந்த கைரேகை அல்லது விழித்திரை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது இதர காரணங்களால் சில நேரங்களில் மாணவர்களின் பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

எனவே பயோமெட்ரிக் வேலை செய்ய வில்லை என்றால் மாணவர்கள் பதற்றம் அடைய தேவை இல்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது உடல் ரீதியான காரணங்களால் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முழுமையாக முடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக, மாணவர்கள் தேர்வு மையத்திலேயே வழங்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட படிவத்தில் (Written Undertaking) கையெழுத்திட்டுச் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு தொடங்கும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு மாலை 6 மணி வரை), பயோமெட்ரிக் செயல்முறைகளுக்காக மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள் என்று என்.டி.ஏ தெளிவுபடுத்தியுள்ளது.

Related Stories: