சென்னை: மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) முதல் எப்எல்2 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
