நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் பணியிட மாற்றம்

சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்னதாக தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக விவாதிக்கப்பட்ட நிலையில் தான் விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, இது குடும்ப நல வழக்கு என்பதால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதோடு கடந்த மாதம் ஏப்.20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஜய்யும், சங்கீதாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இது சம்பந்தமாக வக்கீல்கள் ரத்தின அசோகன், மஞ்சுளா ஆகியோர் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர், என்னை பிரிந்து வாழ்கிறார். ஒரே வீட்டில் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை. என்னை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார். எனக்கு பணம் எதுவும் தருவதில்லை. இதனால் வாழ்க்கை நடத்த எனக்கு சிரமாக உள்ளது. மேலும் அவருக்கு, ஒரு நடிகையுடன் தொடர்பு உள்ளது. நெருக்கமாக பழகி வருகிறார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். நான் தற்போது எப்படி சுதந்திரமாக வாழ்கிறேனோ அதுபோன்று செலவுக்கான பணத்தை வழங்க வேண்டும்.

சொத்தில் எனக்கும் எனது மகனுக்கும் பங்கு வழங்க வேண்டும். வழக்கு முடியும் வரையில் நான் தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என கூறியிருந்தார். மேலும், விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களுக்கு சொந்தமான இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா, நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விஜய்யின் முகவரிக்கு நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா வரும் ஜூன் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா நேற்றுமுன்தினம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பணியிட மாற்றத்துக்கான முழு காரணம் இன்னும் தெரிய வரவில்லை. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொறுப்பேற்ற நீதிபதி சசிகலா, தற்போது திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்ட தகவல் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சுஜாதா மீண்டும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: