சென்னை: தமிழக அரசு பணியில் பணியாற்றிய 5 ஐஏஎஸ் அதிகாரிகள், ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நேற்றுடன் ஓய்வு பெற்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு துறைகளில் உயர் பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி புரிந்து வருகின்றனர். துறை வாரியாக குறிப்பிட்ட உயர் பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அளவிலான அதிகாரிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு கடந்த 23ம் தேதி முடிந்து வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அனைத்து உத்தரவுகளுக்கும் அந்தந்த துறைகளில் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே முடிவு எடுக்க முடியும்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1989ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு பணியில் பணியாற்றி வந்த சந்தீப் சக்சேனா நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதேபோன்று, 1995ம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் பணியை தொடங்கி பல முக்கிய துறைகளில் பணியாற்றிய ஹிதேஷ் குமார் எஸ் மக்வானாவும் ஓய்வு பெறுகிறார். அடுத்ததாக 2003ம் ஆண்டு ஐஏஎஸ் சேவையில் இணைந்து தமிழக அரசு நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த டி.ஆபிரகாம் ஓய்வு பெறுகிறார்.
இதேபோன்று 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் விருப்ப ஓய்வில் செல்வது குறிப்பிடத்தக்கது. அதாவது, டாக்டர் எஸ்.நடராஜன் மற்றும் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் சொந்த காரணங்களால் விருப்ப ஓய்வில் செல்கின்றனர். இதனால் தமிழ்நாடு ஐஏஎஸ் கேடரில் பல மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதால், மாநில நிர்வாகத்தில் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல, காவல்துறையில் ஏடிஜிபியாக உள்ள ஜெயராமனும் நேற்றுடன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
