சரக்கு கப்பல் விபத்தில் கொட்டியதில் 21 சதவீதம் மட்டுமே மீட்பு அரபிக் கடலில் மிதக்கும் 1400 டன் பிளாஸ்டிக் துகள்: தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை மீனவர்களுக்கு பேராபத்து

நாகர்கோவில்: அரபிக் கடலில் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானதில் கொட்டிய பிளாஸ்டிக் துகள்களில் வெறும் 21 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அதிர்ச்சியூட்டும் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா, தோட்டப்பள்ளி கடல் பகுதியில் ‘எம்.எஸ்.சி எல்சா’ என்ற சரக்குக் கப்பல் கடந்த ஆண்டு மே 24ம் தேதி கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அப்போது, அதிலிருந்த 1836.1 டன் பிளாஸ்டிக் துகள்கள் கடலில் கலந்தன. இதனை மீட்கும் பணிகள் கேரளா மட்டுமின்றி குமரி மாவட்ட கடலோர பகுதிகளிலும் நடந்தது.

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கிய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு கடல் பகுதிகளிலும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கின. இதில் 398.19 டன் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இவை பின்னர் கொல்லம் துறைமுக பகுதியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ம் தேதி வரை சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான இந்த விபரங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி எஞ்சிய 1400 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் அரபிக் கடலில் கலந்துள்ளதால், இது கேரளா மட்டுமின்றி அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அரபிக் கடலின் நீரோட்டமானது பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தெற்கு நோக்கி நகரும் தன்மை கொண்டது என்பதால், கேரளக் கடலில் கொட்டியுள்ள இந்த நச்சுத் துகள்கள் குமரி மாவட்டத்தின் நீரோடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை கிராமங்களுக்குப் பரவ அதிக வாய்ப்புள்ளது.

இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மீன்களின் உணவுச் சங்கிலியைப் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் இந்தத் துகள்களைத் தங்களது முட்டைகள் அல்லது உணவு எனத் தவறாகக் கருதி உட்கொள்ளும்போது, அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படும். இது நீண்ட கால அடிப்படையில் குமரி கடலோரப் பகுதிகளில் மீன் வளம் குறையக் காரணமாகி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
மேலும், பிளாஸ்டிக் துகள்களை உண்ட மீன்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது, மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்குள் நுழைந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மீனவர்களின் வலைகளில் இந்த நுண் துகள்கள் சிக்கி வலைகளைப் பாழாக்குவதோடு, இயந்திரப் படகுகளின் மோட்டார்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமன்றி கப்பலில் இருந்து வெளியேறிய சுமார் 371 டன் எரிபொருள் எண்ணெய்யும் கடலில் கலந்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பவளப்பாறைகள் மற்றும் குமரி கடற்பகுதியில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காகக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1227.62 கோடி இழப்பீடு கோரப்பட்டுள்ள நிலையில், கடலில் கலந்துள்ள 79 சதவீத கழிவுகள் இன்னும் மீட்கப்படாதது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தொடங்கிய இந்த கடல் மாசு, குமரி மாவட்ட எல்லை வரை பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகமும் மீனவர் அமைப்புகளும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: