கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலின் போது பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் மக்கள் மீது மத்திய படையினர் தாக்குதல் நடத்தி அத்துமீறினர். இதனால், மாநிலத்தில் எந்த வாக்குச்சாவடியும் பாதுகாப்பாக இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கொல்கத்தா உள்ளிட்ட 142 தொகுதிகளில் நேற்று நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சொந்த தொகுதியான பவானிபூரில் வாக்களித்த பிறகு, ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தேர்தல் பார்வையாளர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்கள், பாஜவினர் உத்தரவுப்படி செயல்படுகின்றனர். அனைத்து கட்சி கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. 70-வது வார்டு கவுன்சிலரை வெளியேவர அனுமதிக்கவில்லை. பாஜவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். நானும், பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் இரவு முழுவதும் விழித்திருந்தோம். பல்வேறு இடங்களிலிருந்து தடியடி சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரை மத்திய படையினர் தடுத்து வைத்துள்ளனர். எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மாநில காவல்துறை பணியில் அமர்த்தப்படவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளையும் மத்திய படையினரே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மக்களை துன்புறுத்துவதுதான் இவர்களது வேலையா?’ என்றார். இதற்கிடையில், முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டைமண்ட் ஹார்பரில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாஜ புகார் தெரிவித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஆனால், தோல்வி பயத்தால் பாஜ வீண் வதந்திகளை பரப்புவதாக திரிணமூல் காங்கிரஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹார்பர் பகுதியில் வன்முறையை தடுக்க சிறப்பு காவல் பார்வையாளர் அஜய் பால் அதிரடி நடவடிக்ைக எடுத்தார். குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் ‘சிங்கம்’ என அழைக்கப்படும் உத்தரப்பிரதேச கேடர் அதிகாரியான அஜய் பால் சர்மா, தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) குற்றம் சாட்டியுள்ளது. ஃபால்டா தொகுதி டி.எம்.சி.வேட்பாளர் ஜஹாங்கிர் கானின் வீட்டுக்கு நேரடியாக சென்று, ‘‘வாக்காளர்களை அச்சுறுத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.எம்.சி. சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் படைகள் பாதுகாப்பு: தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், ‘வாக்குப்பதிவு முடிந்த பிறகும் 700 கம்பெனி மத்திய படையினர் மேற்கு வங்கத்திலேயே தங்கியிருப்பர். அவர்கள் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பணியிலும் ஈடுபடுவர். மறு உத்தரவு வரும் வரை அவர்கள் தொடர்ந்து இந்தப் பணிகளி்ல் ஈடுபடுவார்கள். குறிப்பாக, பதற்றம் நிறைந்த பகுதிகளில் மாநில நிர்வாகத்திற்கு துணையாக இவர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். கள நிலவரம் மற்றும் பாதுகாப்பு முகமைகளின் அறிக்கையின் அடிப்படையில் படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.
