சுல்தான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்த 140 கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட கோழிப்பண்ணையின் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் தனது கோழி பண்ணைக்கு அருகில் சென்ற ஒரு திருமண ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட டி.ஜே (DJ) சிஸ்டமில் இருந்து வெளியான பலத்த இசையே, தனது பண்ணைகளில் இருந்த 140 கோழிகளின் திடீர் இறப்பிற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த வினோத சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பப்பன் விஸ்வகர்மா என்பவரின் மகளின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலம் ஒன்று கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. குத்வார் பகுதியிலுள்ள ராம் பத்ர பூர்வா கிராமத்திலிருந்து வந்துகொண்டிருந்த அந்த ஊர்வலத்தில், மிக அதிக ஒலி எழுப்பும் டி.ஜே (DJ) இசைக்கருவி ஒன்றும் இடம் பெற்றிருந்தது.
இந்த கிராமத்திற்கு அருகில் சபீர் அலி என்பவர் தனது பெயரிலேயே கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். குறிப்பிட்ட திருமண ஊர்வலம் இரவு சுமார் 9:30 மணியளவில் தனது பண்ணையின் முன்பாகக் கடந்து சென்றதாக புகாரில் தெரிவித்து உள்ளார். இவரது கூற்றுப்படி, டி.ஜே இசைக்கருவியிலிருந்து எழுந்த அதீத இரைச்சல் காரணமாகப் பண்ணையிலிருந்த கோழிகள் கடும் பீதியாகின. அந்த பெரும் இரைச்சலை தாங்கி கொள்ள இயலாமல் போனதன் விளைவாக தன் பண்ணையில் இருந்த 140 கோழிகள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
திருமண ஊர்வலத்தின் போது ஒலிக்கவிடப்பட்ட இசையின் ஒலி அளவு வரம்பு மீறியதாக இருந்ததாகவும், அது கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்ததே இறுதியில் அவற்றின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாக சபீர் அலி புகாரில் குறிப்பிட்டிருந்தார். மொத்தத்தில் திருமண ஊர்வலத்தின் போது ஒலித்த உரத்த டிஜே இசையே தனது கோழிப்பண்ணையில் ஏற்பட்ட முழு இழப்புக்கும் காரணம் என்று சாடியுள்ளார். ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிஜே அல்லது திருமணத்தை நடத்திய குடும்பத்தினரிடமிருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் பார்சிபூரைச் சேர்ந்த டிஜே ஆபரேட்டரான கவி யாதவ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, ஊர்வலத்தின் போது ஒலிக்க செய்யப்பட்ட இசை, நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவுகளுக்கு மேல் இருந்ததா என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது. கோழிகளின் இறப்புக்கு உண்மையில் அதீத டிஜே சத்தம் தான் காரணமா என்பதை தீர்மானிக்க, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சில நிபுணர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் அதிக அதிர்வு கொண்ட சத்தத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. எனவே டி.ஜே-வில் இருந்து வந்த அதிக டெசிபல் மற்றும் தீவிரமான அதிர்வுகள் கோழிகளுக்கு கடும் மன அழுத்தம் மற்றும் பீதியை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் அவை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இது போன்று இதற்கு முன் ஒடிசாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பாலசோர் மாவட்டத்தில் ஒரு திருமண ஊர்வலத்தின் போது இசைக்கப்பட்ட டி.ஜே இசையினால் 63 கோழிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
