ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, நேற்று(29-04-2026) இரவு மௌஜ்பூர் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,15 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும்; ஆனால் அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது CNG எரிபொருள் மூலம் இயங்கும் வாகனம் என்பதால், தீ மிக வேகமாகப் பரவியது. இதனால் உள்ளே இருந்தவர்களுக்குத் தப்பித்து வெளியேறப் போதுமான அவகாசம் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாகனத்தை ஓட்டிச் சென்ற வினோத் குமார் மேஹர் என்பவர், காரிலிருந்து குதித்துத் தப்பித்த போதிலும், அவருக்கு சுமார் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் முதலில் அருகிலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
