அதிகரித்த சைபர் கிரைம்கள்.. 2025-ஆம் ஆண்டில் சுமார் 2.5 பில்லியன் டாலரை இழந்த இந்தியர்கள்

டெல்லி: இந்தியாவில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மக்கள் டிஜிட்டல் மோசடிகள் மூலம் சுமார் 2.5 பில்லியன் டாலரை இழந்துள்ளனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் பல்வேறு டிஜிட்டல் மோசடிகள் காரணமாக இந்தியர்கள் சுமார் 2.5 பில்லியன் டாலரை இழந்துள்ளனர். மொத்த நிதி இழப்பில் இது முந்தைய ஆண்டை விட சிறிய அளவு வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், பதிவான புகார்களின் எண்ணிக்கை 24% அதிகரித்து, 2.8 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்களை எட்டியுள்ளது. பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 2024-ஆம் ஆண்டு 22.68 லட்சம் வழக்குகளாக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 28.15 லட்சம் வழக்குகளாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்தியாவில் சைபர்கிரைம் மோசடிகள் கவலைக்கிடமான வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து 4,300% என்ற அதிர்ச்சியூட்டும் சதவீத அதிகரிப்புடன், 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் சுமார் 25 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். இந்த மோசடிகளில் ஏறக்குறைய 50 விழுக்காடு, தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் வெளிநாட்டு மோசடி மையங்களிலிருந்தே அரங்கேறுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் சைபர் கிரைம்களை சமாளிக்க பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் அக்கவுண்ட்ஸ்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் பணம் செலுத்துபவர் தரப்பில் ஒரு மணி நேர தாமதம் ஏற்படுத்துவது மற்றும் முதியவர்கள் மேற்கொள்ளும் அதிக மதிப்புள்ள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு “நம்பகமான நபர்” மூலம் கூடுதல் அங்கீகாரம் வழங்குவது போன்ற நடவடிக்கைள் இதில் அடங்கும்.

Related Stories: