துபாய்: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், அந்த வழியாக வந்த 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதனை தொடர்ந்து போர் தொடங்கியது.
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதும் நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரான் -அமெரிக்கா நாடுகள் ஒப்புக்கொண்டன. எனினும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தது.
அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் லெபனான் -இஸ்ரேலும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. லெபனானில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்க முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரான் சம்மதித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தக கப்பல்களுக்கு முழுமையாக திறக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரை அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை முழுவீச்சில் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஈரானின் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுப்பது ஈரானை ஆத்திரமடைய செய்துள்ளது.
ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர்வதன் மூலமாக அளித்திருந்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் மீறிவிட்டதாக ஈரானின் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு, ஆயுதப்படைகளின் கடுமையான நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் மீண்டும் அதன் முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக ஈரானின் ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடைமுறையில் இருக்கும் வரை ஹார்முஸ் வழியாக நடக்கும் போக்குவரத்து தடையை நாங்கள் தொடர்ந்து அமலில் வைத்திருப்போம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புரட்சிகர ராணுவ படையின் இரண்டு துப்பாக்கி படகுகள் இந்தியக்கொடியுடன் வந்த இரண்டு கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை.
கப்பல்களும் சேதமடையவில்லை. எனினும் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் போக்குவரத்துப் பாதையில் நடந்த இந்த சம்பவத்துக்கு பின் அந்த இரண்டு கப்பல்களும் திரும்பிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த கப்பல்களில் ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் விஎல்சிசி கப்பலாகும்.
ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடர்ந்த போதிலும் இந்தியாவின் எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கு ஈரான் அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது நடந்துள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கண்டனம்: இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை அடுத்து ஈரான் தூதரை வெளியுறவு துறை அமைச்சகம் வரவழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது.
* ஈரான் வான்வெளி திறப்பு
போரின் காரணமாக கடந்த 7 வாரங்களாக ஈரானின் வான்வெளி மூடப்பட்டு இருந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் தனது வான்வெளியை திறப்பதற்கு ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானின் வான்வெளி பகுதியளவு திறக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான நாளிதழின்படி, ஈரான் மீதான வான்வழிப்பாதைகள் காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் விமான நிலையங்களில் படிப்படியாக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டு இருந்தாலும் அதற்கான காலக்கெடு எதுவும் தெரிவிக்கவில்லை.
* ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடந்தது?
ஈரான் போரால் ஹார்முஸ் ஜல சந்தியை கடக்க முயன்ற இந்திய கச்சா எண்ணெய் மற்றும் காஸ் ஏற்றி வந்த கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு இந்தியாவுக்கு வர இருந்த 14 கப்பல்கள் நிற்கின்றன. இந்திய தேசிய கொடியுடன் நேற்று கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 14 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றன.
அவற்றில் இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தினர். இதன் விளைவாக, அந்தக் கப்பல்களில் 13 பாரசீக வளைகுடாவில் உள்ள வெவ்வேறு இடங்களுக்குத் திரும்பிச் சென்றன. துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்த இந்தியக் கொடி தாங்கிய கப்பல் ஒன்று கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றது. அதன் ஒரு ஜன்னல் கண்ணாடி உடைந்ததால், அது தனது பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டாவது கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் அதுவும் திரும்பிச் சென்றுவிட்டது. இருப்பினும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்காக கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற, இந்தியக் கொடி தாங்கிய மற்றொரு கப்பல், ஜலசந்தியைக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கிச் வந்து கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு ஈரானிய துப்பாக்கிப் படகுகள், இலக்கு வைக்கப்பட்ட எண்ணெய்க் கப்பலை நெருங்கி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன.
கெஷ்ம் மற்றும் லராக் தீவுகளுக்கு இடையேயான கடற்பரப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர். இந்தியா நோக்கி வரும் 14 கப்பல்களில், ஏழு இந்தியக் கொடியையும், நான்கு லைபீரியக் கொடியையும், இரண்டு மார்ஷல் தீவுகளையும், ஒன்று வியட்நாமையும் சேர்ந்தவை. அவற்றில் ஆறு கச்சா எண்ணெயையும், மூன்று எல்பிஜி-யையும், நான்கு உரங்களையும் ஏற்றிச் செல்கின்றன. கப்பல்களில், ஐந்து மொத்த சரக்குக் கப்பல்கள் ஆகும். அனைத்து 14 கப்பல்களும் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன.
* யூரேனியத்தை அமெரிக்கா தோண்டி எடுக்கும்
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி நிலையங்களுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் 440கிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரிசோனாவில் ஆற்றிய உரையில்,
‘‘அமெரிக்கா ஈரானுக்குள் சென்று ஏராளமான அகழ்வு இயந்திரங்களை கொண்டு பூமிக்குள் புதைந்த யூரேனியத்தை வெளியே எடுக்கும். எந்த வகையிலும், எந்த வடிவிலும் பணம் கைமாறாது” என்று தெரிவித்துள்ளார். ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யூரேனியத்தைப் தன்வசம் எடுத்துக்கொள்ளவோ அல்லது அதன் செறிவைக் குறைக்கவோ சீனா தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* லெபனானில் படைகள் தக்கவைக்கப்படும்
லெபனானில் இஸ்ரேல் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு லெபனான் மக்களுக்கு உரிமை உண்டு என்றும், நிலைமைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்து நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
* அடுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை – ஈரான்
துருக்கியின் அன்டலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே, யூரேனியம் தொடர்பாக அமெரிக்க அதிபர் முன்வைத்த கூற்றுக்களை ஏற்க முடியாது. அமெரிக்கர்கள் தங்களது தீவிர நிலைப்பாட்டை கைவிடாத காரணத்தினால் அமெரிக்கா உடனான நேரடி பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்றுக்கு ஈரான் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்தபோதிலும், ஏப்ரல் 22ம் தேதி போர்நிறுத்த காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்காவும், ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி இன்னும் நெருங்கிவருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ஒரு மணி நேரத்தில் டிரம்பின் 7 பொய்கள்
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 கூற்றுக்களை முன்வைத்தார். அந்த ஏழுமே பொய்யானவை. இந்த பொய்களால் அமெரிக்கா வெற்றி பெறவில்லை.
பேச்சுவார்த்தைகளிலும் நிச்சயமாக எந்த முன்னேற்றமும் ஏற்படாது. நீர்வழிப்பாதை திறந்திருக்கிறதா அல்லது மூடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்த முடிவுகள் சமூகவலைதளங்களால் அல்ல. களத்தால் தீர்மானிக்கப்படும். முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீதான பதற்றம் தொடரும்” என்றார்.
