இஸ்லாமாபாத்: மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகத் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 11ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக் கொண்டுவருவதற்காக தீவிரமான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பதாக பாகிஸ்தானில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினரும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிப்பதால், பாகிஸ்தான் தனது மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்க இது வழிவகுத்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில்,அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றனர். இந்தநிலையில், பாகிஸ்தான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாடு பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அதே போல் ராணுவ பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஈரானிற்கு சென்றுள்ளார். சவுதி மற்றும் கத்தார் தலைவர்களுடன் கலந்துரையாடிய ஷெபாஸ் ஷெரீப் துருக்கிக்கு சென்றுள்ளார். பீல்ட் மார்ஷல் ஈரானில் அதன் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தானின் இதர மாகாணங்களில் இருந்து போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
* இலங்கை கடும் பாதிப்பு
மேற்கு ஆசிய நெருக்கடியின் தொடர் விளைவுகளால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என ஐநா. அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ராணுவப் பதற்றம் அதிகரித்தல்:
ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்” என்ற தலைப்பிலான அறிக்கை, இலங்கை அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில், 2025-ஆம் ஆண்டில் அந்த நாட்டிலிருந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்களில் 80.2 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்வார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* தடையற்ற கப்பல் போக்குவரத்து
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய வர்த்தக சுதந்திரத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐநாவில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வதனேனி ஐ.நா சபையில் பேசுகையில்,இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு குறிப்பாக கவலையளிக்கும் ஒரு அம்சம்,ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்பானது.
இந்த மோதலில் வர்த்தகக் கப்பல்கள் ராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டதை இந்தியா கண்டித்துள்ளது. வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பொதுமக்களான கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார்.
