வாஷிங்டன்: இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என டிரம்ப் அறிவித்துள்ளதால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதாக ஈரான் கூறியுள்ள போதிலும், கப்பல் போக்குவரத்து இன்னும் பெருமளவில் முடங்கியே உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமீபத்திய எக்ஸ் பதிவில் ‘ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு, வர்த்தகம் மற்றும் கப்பல்களின் முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக உள்ளது. இருப்பினும், ஈரானுடனான நமது ஒப்பந்தம் 100% முழுமையடையும் வரை, ஈரானைப் பொறுத்தமட்டில் மட்டும் கடற்படை முற்றுகையானது தொடர்ந்து முழு வீச்சில் நடைமுறையில் இருக்கும். இப்பிரச்சினை தொடர்பான பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்டுவிட்டதால், இப்பணிகள் மிக விரைவாக நிறைவடையும்” என கூறி இருக்கிறார்.
சுமார் 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் ஆனால் தெளிவான விளக்கம் ஏதுமின்றி அவற்றின் இயக்கம் திடீரென நின்றதாகவும், சில கப்பல்கள் திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை நிலவரப்படி, அந்தக் குறுகிய பாதையின் இருபுறமும் பல கப்பல்கள் குழுமியிருந்தன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 7 அன்று தொடங்கியது, அதே நேரத்தில் லெபனானில் தனியாக 10 நாள் போர்நிறுத்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த போர் நிறுத்த காலத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியே அனைத்து எண்ணெய் கப்பல்களும் அனுமதிக்கப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக கச்சா எண்ணெய் விலை 10% சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
