*மரத்தில் உள்ள காய்களை அகற்றினால் தீர்வு ஏற்படும்
*தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையோர இலவ மரத்தில் இருந்து வெடித்து சிதறும் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். கோடைகாலம் துவங்கிவிட்டதால், வாகன ஓட்டிகள் புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.
புதுச்சேரி மற்றும் கிராமப்புறத்தில் சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான இலவம் பஞ்சு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நகரப்பகுதியான தாவரவியல் பூங்கா, சுதேசி மில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் நீண்டு நெடிந்து வளர்ந்து கிளைகளை பரப்பி நிற்கிறது. இலைகள் உதிர்ந்து இலவம் பஞ்சு காய்கள் வெடித்து சிதறும் நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.
காய்கள் வெடித்து சிதறுவதற்கு முன்னதாக இதனை அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில இடங்களில் இலவம்பஞ்சு வெடித்து காற்றில் பஞ்சு பறப்பதால், வாகன ஓட்டிகள் கண்களில் விழுந்து கடும் அவதிக்கு உள்ளாவதும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் இலவ மரங்களில் உயிரை பணயம் வைத்து ஏறி காய்களை பறிக்க ஆட்கள் இருந்தனர். ஆனால், தற்போது அதை செய்ய யாரும் முன்வருவதில்லை.
பார்ப்பதற்கு பயில்வான்போல, இந்த மரங்கள் காணப்பட்டாலும், இதன் கிளைகள் உடைந்து விழுந்து விடும் என்பதால், ஆட்கள் ஏறுவதற்கு அச்சம் கொள்கின்றனர்.போதாத குறைக்கு கூரான முட்கள் என இலவம் பஞ்சு மரங்கள் எல்லோருக்கும் சவால்விட்டு கொண்டு நிற்கிறது.
பஞ்சு வாங்கி தொழில் செய்தவர்கள்கூட இதில் இருக்கும் ஆபத்தை கண்டு தற்போது தொழில் செய்யவில்லை. ஆபத்து அதிகம். லாபம் குறைவு என்பதால் இலவம் பஞ்சுக்கான மார்க்கெட் குறைந்துவிட்டது. காய்களை பறித்து, அதனை அடித்து, விதைகளை நீக்கி, பெட் தயாரிப்பதெல்லாம் மறுந்துபோய், ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சூழலில் அரசு பழுத்து காய்ந்து தொங்கும் இலவ மரத்தின் காய்களை முன்கூட்டியே அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தீயணைப்பு துறையினரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் உள்ள ஹைட்ராலிக் ஏணி, வாகனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இலவம் மரத்தின் காய்களை அகற்ற முடியும்.
எனவே, பஞ்சு வெடித்து சிதறுவதற்கு முன்னதாக சம்மந்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மரங்களை கண்டறிந்து இலவம் காய்களை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
