‘சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் தெரியாத எடப்பாடி’ பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம்: திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கோவி.செழியனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பந்தநல்லூர் கடைவீதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை படிக்க விடாமல் தடுத்தார்கள். எல்லோரும் வெளியே வந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது தான் திமுக.இந்தியாவில் இன்று தமிழ்நாடு தான் உயர்கல்வியில் முதலிடம். பள்ளி முடித்த மாணவர்கள் எத்தனை பேர் கல்லூரிக்கு செல்கிறார்கள் என்பதுதான் ஜிஇஆர். ஒட்டுமொத்த இந்தியாவின் ஜிஇஆர் இன்று 25 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டு ஜிஇஆர் 50% ஆகும்.

எடப்பாடி என்னிடம் கோபித்துக் கொள்கிறார். சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவர் அவர். எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் நாம் சரியான பாடத்தை கற்றுத்தர வேண்டும். மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்று சொல்கிறார். முதலில் அவரை காப்பாற்ற வேண்டும். பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்க வேண்டும்.ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளர் கண்ணனை ஆதரித்து நேற்றிரவு உதயநிதி பேசியது: இந்த தேர்தலில் மோடியின் டெல்லி அணி, நமது தமிழ்நாடு அணி இடையே தான் போட்டியே.

கடந்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் இல்லை, நிதியும் இல்லை. தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் பாஜவை விட மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான் அதிமுக என்ற போர்வையில் உள்ளே நுழைய பார்க்கிறது. டெல்லி அணியை தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: