புதுவையிலும் தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

புதுச்சேரி: புதுவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எப்படி தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க தயாராக இருக்கிறோமோ, அதேபோல் புதுச்சேரியிலும் தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க வேண்டும் என தெரிவித்தார். புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து மரப்பாலம் சந்திப்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பேசியதாவது:

புதுச்சேரி எப்போதும் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்காது. இது அன்பான மண். இந்த மண்ணில் பாசிச பாஜக சக்திகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டது. பாஜக மக்கள் விரோத திட்டங்களை சோதித்து பார்க்கும் இடமாக புதுச்சேரியை பாஜக மாற்றி கொண்டு இருக்கிறது. புதிய கல்வி கொள்கைகளை புதுவையில் அமல்படுத்தி உள்ளார்கள். புதிய கல்வி கொள்கை மூலமாக குலக்கல்வி கொள்கையை மீண்டும் அமல்படுத்தி உள்ளார்கள். வருங்கால இளம் தலைமுறையின் எதிர்காலத்தை கெடுக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவின் எந்த சதி திட்டங்களையும் உள்ளே நுழைய விடாமல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தடுக்கிறார். தமிழ்நாட்டில் எப்படி அதிமுக தோளில் ஏறி நின்றி பாஜக சவாரி செய்கிறதோ, அதேபோல், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தோளில் ஏறி பாஜக சவாரி செய்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மூலம் தமிழ்நாட்டை அவர்கள் கண்ட்ேராலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி முயற்சி செய்கிறார்களோ, அதேபோல் புதுச்சேரியையும் அவர்களது கண்ட்ரோலில் வைத்து கொள்ள பாஜக நினைக்கிறது.

புதுச்சேரியை டெல்லியில் இருந்து கண்ட்ரோல் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நீங்கள் அனைவரும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
வருகிற தேர்தலில் தமிழகத்தில் எப்படி தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க தயாராக இருக்கிறோமோ, அதேபோல் புதுச்சேரியிலும் தேஜ கூட்டணியை விரட்டி அடிக்க வேண்டும். இது பாஜகவின் ஆணவத்துக்கு முடிவு கட்டுகிற தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: