அசாம் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் – அமித்ஷா பேச்சு

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் ஆதிக்கம் செலுத்த பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அசாமில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து வரும் மே 4-ஆம் தேதி அங்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் அசாமில் தேர்தல் பிரச்சார பொது கூட்டமொன்றில் பேசிய அமித்ஷா, ஊடுருவிய நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டதால், அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து ஊடுருவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சிகள் ‘வாக்கு வங்கி அரசியலில்’ ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். ஊடுருவல்காரர்களை நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம். தற்போது அவர்களை ஒவ்வொருவராக வேரறுத்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே பாஜக அரசை தேர்ந்தெடுங்கள். மேலும், அசாம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக தலைமையிலான நிர்வாகங்கள் ஆட்சியில் இருந்தால், ஊடுருவல் முற்றிலுமாக நின்றுவிடும் என்றும் குறிப்பிட்டார்.

அண்டை நாட்டிலிருந்து வரும் ஊடுருவல்காரர்கள் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு, ஏழைகளின் ரேஷன் பொருட்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை பறிக்க முயல்கிறார்கள். இவர்களை வெளியேற்றும் பணியை பாஜக அரசு மட்டுமே செய்யும். ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் மட்டுமே அசாமில் வளத்தை உருவாக்க முடியும், இந்த வேலையை பாஜக-வால் மட்டுமே செய்ய முடியும் என்றும் அமித்ஷா கூறினார். அதே போல பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அசாமிலுள்ள 11 ஆயிரம் இளைஞர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, பயங்கரவாத செயல்களை விட்டுவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைத்துள்ளது என்றார். நீங்கள் போடும் ஓட்டு வெறும் ஒரு எம்எல்ஏ-வை உருவாக்கவோ அல்லது ஹிமந்த பிஸ்வா சர்மாவை மீண்டும் முதலமைச்சராக்கவோ அல்ல, மாறாக, ஒட்டுமொத்த பராக் பள்ளத்தாக்கையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்க என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.

Related Stories: