வில்லிவாக்கத்தில் சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு; பல கோடி ரூபாய் சொத்தை மறைத்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: பல கோடிரூபாய் சொத்துக்களை மறைத்ததாக சுயேட்சை வேட்பாளரின் எதிர்ப்பு காரணமாக ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் சுமார் ரூ.197 கோடியும் தனது மனைவி டெய்சி பெயரில் சுமார் ரூ.245 கோடி சொத்தும் உள்ளதாகத் தெரிவித்து இருந்தார். குறிப்பாகத் தனது மனைவி 41 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யக் கோரிச் சுயேட்சை வேட்பாளர் முரளி வினோத் என்ற சுயேட்சை வேட்பாளர் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: ஆதவ் அர்ஜுனா அங்கீகரிக்கப்படாத பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 33ஏ மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு, அத்துடன் 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தும் விதி 4ஏ ஆகியவற்றின் படி, அவருக்கும் அவரது மனைவி மற்றும் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து ஒவ்வொரு அம்சத்தையும் வெளிப்படுத்த வேண்டியது அவரது கடமையாகும்.

இருப்பினும், அவர் தனது வங்கி வைப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் பெரும் தொகையான வட்டி வருமானத்தை மறைத்துள்ளார். வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை வெளிப்படுத்தாமலும், பல்வேறு வங்கிகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்த தேதியைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் அசையும் சொத்துக்கள் தொடர்பான 7(ஏ) பகுதியில், வட்டி வருமானத்தை மறைப்பதற்காக 28.03.2026 அன்று ரூ.14 கோடி டெபாசிட் செய்ததாகக் காட்டியுள்ளார். ஆதவ் அர்ஜுனா தனது கணக்குகளைத் தொடங்கிய தேதிகளையும், குறிப்பாக ரூ.14 கோடி வைப்புத்தொகை செய்த தேதியையும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். இதன் மூலம் அவர் பெரும் வருமானம் பெறுகிறார். வைப்புத்தொகை தேதியை இவ்வாறு மறைப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(ஏ) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 33ஏ-இன் கீழ் வில்லிவாக்கம் தொகுதி வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும்.

தனது பிரமாணப் பத்திரத்தின் 9பி பகுதியில் ‘‘வருமான ஆதாரங்கள்” என்ற இடத்தில் ‘‘தொழில்” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில், சென்னை ஹெச்டிஎப்சி மற்றும் அக்சிஸ் வங்கிகளில் உள்ள ரூ.14 கோடி வைப்புத்தொகையிலிருந்து சுமார் ரூ.84,00,000 வட்டி வருமானமாகப் பெற்றுள்ளார் என்பது தெரியவருகிறது. மேலும், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அக்சிஸ் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1,95,17,171 இருப்பு வைத்துள்ளார். நிரந்தர வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து அவர் தொடர்ந்து வட்டி வருமானம் பெற்று வந்தபோதிலும், வருமான ஆதாரத்தில் ‘‘வட்டி” என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஆதவ் அர்ஜுனா தனது தொழிலின் தன்மையை மறைத்துள்ளதுடன், அசையும் சொத்துக்களின் 7(ஏ)(i) பகுதியில் 28.03.2026 நிலவரப்படி கையில் உள்ள ரொக்கம் ரூ.1,69,90,582 என்று காட்டியுள்ளார். மேலும் அவரது மனைவி கையில் ரூ. 12,22,799 ரொக்கம் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்திருப்பது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவே ஆகும். மேலும் இந்தத் தொகை அவரது வருமான வரித் தாக்கல் கணக்கில் காட்டப்படவில்லை. வருமான வரிச் சட்டத்தின்படி ஒரு நபருக்கு ரூ.10,000க்கு மேல் ரொக்கமாக வழங்க அனுமதியில்லை எனும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்திருப்பது அந்த ரொக்கத்தின் ஆதாரத்தை அவர் மறைத்துள்ளதையே காட்டுகிறது.மேலும், ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பெயரில் உள்ள பின்வரும் நிறுவனங்களின் அசையும் சொத்துக்கள் இணைப்பு 7ஏ பகுதியில் மறைத்துள்ளார்.

மேக்னடிக் ரியல்கான் எல்எல்பி, பெஸ்ட் & கோ டிரேடர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ மெர்ச்சன்டைசர்ஸ் எல்எல்பி, ஓக்வுட் டவுன்ஷிப்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ ஏஜென்சீஸ் எல்எல்பி, அம்பிஷியஸ் ஸ்கைஸ்க்ரேப்பர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ டீலர்ஸ் எல்எல்பி, எமினென்ட் டுவெல்லர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ அசோசியேட்ஸ் எல்எல்பி, பெஸ்ட் அண்ட் கோ டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எல்எல்பி, எலைட் டுவெல்லர்ஸ் எல்எல்பி, ஜெயண்ட் சிட்டி புரோமோட்டர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ என்டர்பிரைசஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ கேமிங் சொல்யூஷன் எல்எல்பி, ப்ளூம் டுவெல்லர்ஸ் எல்எல்பி, அம்பிஷியஸ் டவுன்ஷிப்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ கேமிங் டிரேடர்ஸ் எல்எல்பி, குரூவி இன்ஃபிராகாம் எல்எல்பி ஆகிய நிறுவனங்களின் எல்எல்பி மறைக்கப்பட்டுள்ளது.

பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்:
டெய்சி மெர்ச்சன்டைசர்ஸ் பி லிட், மார்ட்டின் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் பி லிட், மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பி லிட், மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பி லிட், மார்ட்டின் டுவெல்லர்ஸ் பி லிட்,, மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன் பி லிட், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பி லிட், மார்ட்டின் ரியல்கான் பி லிட் சார்லஸ் புரோமோட்டர்ஸ் பி லிட், டாமினன்ட் ஸ்கைஸ்க்ரேப்பர்ஸ் பி லிட், டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பி லிட், டாமினன்ட் ஹவுசிங் டெவலப்பர்ஸ் பி லிட், டெய்சி டிசைன்ஸ் பி லிட், எக்ஸ்பிளிசிட் பில்டர்ஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேபிடல் பி லிட், வின்-ஃபினிட்டி கேமிங் பி லிட், எக்ஸ்பிளிசிட் புரோமோட்டர்ஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், எக்ஸ்பிளிசிட் பிராபர்ட்டீஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், எக்ஸ்பிளிசிட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பி லிட்.

30.03.2026, 04.04.2026 மற்றும் 06.04.2026 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று தேர்தல் பிரமாணப் பத்திரங்களிலும் மேற்கூறிய அசையும் சொத்துக்களை அவர் மறைத்துள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 33ஏ மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(ஏ)இன் படியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும் அவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனாவின் மனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: