நாமக்கல், ஏப்.6: நாமக்கல்லில் புத்தகத் திருவிழா தொடங்கியது. மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் புத்தக திருவிழா துவங்கியது. வரும் 12ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
இதில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், பல்வேறு அறிஞர்களின் புத்தகங்கள், நாவல்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 50 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, மக்கள் வாசிப்பு இயக்கத்தின் தலைவர் வீரபாலன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
