நாமக்கல், ஏப்.3: 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து கோடை விடுமுறை துவங்கியதால் மாணவ, மணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 92 மையங்களில் நடந்த பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த 9,817 மாணவர், 8,851 மாணவியர் என மொத்தம் 18,668 பேர் தேர்வு எழுதினர். நேற்று கடைசி தேர்வாக, சமூக அறிவியல் தேர்வு நடந்தது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், 10ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, கோடை விடுமுறை விடப்பட்டதால், மாணவியர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு குதூகலமாக வீடு திரும்பினர். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
