அமராவதி: ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாத குழு ஆந்திராவில் செயல்படுவதாக உளவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது. ஈராக், சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற வெளிநாட்டு தொடர்பாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஜிஹாதி குழு ஒன்று ஆந்திராவில் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இக்குழு இந்தியாவில் இளைஞர்களை தீவிரவாத பாதையில் மாற்ற மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவுடன் தொடர்புடைய 3 பேர் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்ய ஆந்திரா காவல்துறை பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தனிப்படையை அனுப்பி வைத்தது. இக்குழுவின் முக்கிய குற்றவாளியான ரஹமத்துல்லா ஷெரீப் மற்றும் அவரது கூட்டாளிகள், ஜிஹாதி பிரச்சாரத்தை பரப்புவதிலும், ஆன்லைன் வீடியோக்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு தனியாக காவாதீன் என்ற பிரிவில் சேர ஊக்குவிக்கப்படுவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இக்குழுவை சேர்ந்த சில நபர்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள மதரசாக்களில் ஜிஹாதி பயிற்சி பெற்றவர்கள். இவர்கள், குழுவில் மேலும் பலரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
