குடகு: குடகு மாவட்டம் தடியண்டமோள் மலையில் டிரக்கிங் சென்று மாயமான கேரள இளம்பெண்ணை வனத்துறையினர் 4 நாள் தீவிரமாக தேடி பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (36). ஐடி இன்ஜினியரான இவர் கொச்சியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வியாழக்கிழமை குடகு மாவட்டத்தின் தடியண்டமோள் மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். ஆனால் பாதை மாறி அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி கொண்டார்.
இது குறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறுகையில் ‘ கேரளாவில் இருந்து டிரக்கிங் செல்ல சரண்யா தனியாக வந்துள்ளார். கக்கபே கிராமத்தின் தனியார் ஹோம்ஸ்டேயில் தங்கியிருந்த சரண்யா கைட் மற்றும் 15 பேருடன் கடந்த வியாழக்கிழமை குடகின் உயரமான மலையான தடியண்டமோள் மலைக்கு சென்றிருந்தார். அன்று பகலே அவர் காணாமல் போயுள்ளார்.
தகவல் அறிந்ததும், போலீசார், நக்சல் ஒழிப்புபடை,மோப்பநாய், மற்றும் டிரோன் மூலம் 50 பேர் கொண்ட 5 குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் போன் லொகேஷனை வைத்து தேடும் பணி நடந்தது. உள்ளூர் பழங்குடியின மக்கள் உதவிக்கு வந்தனர். அதிநவீன தெர்மல் டிரோன் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் இருந்த இடத்ைத மீட்பு குழுவினர் அடையாளம் கண்டு பத்திரமாக மீட்டனர். அவரை மலையில் இருந்து கீழே விரைவில் அழைத்து வருவார்கள் என்றார்.
