அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டம், கோலாகாட் மாவட்டங்களில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு ஹிமந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹிமந்தா சர்மா தலைமையிலான அரசு, மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி வருகிறது. அவர் இன்னும் சில நாட்கள் மட்டும்தான் பேசுவார்.
அதன் பிறகு, அசாமில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அவர் மன்னிப்புக் கேட்டாலும் சட்ட நடவடிக்கை தொடரும். அவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறையில் வைக்க நடவடிக்கை எடுப்போம். அசாம் மொழி பாடகர் ஜூபின் கார்க் தனது வாழ்நாள் முழுவதும் அசாம் மக்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டார். அவர் யாரிடமும் தவறாக நடந்துகொண்டதில்லை. ஜூபின் கார்க்கை போல் வெறுப்புக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க பாடுபடுவதே காங்கிரசின் தத்துவம்.
அசாமில் 3 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 60,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படவில்லை. பாஜ கட்சிக்கு தேர்தல் நிதி அளித்த நிறுவனங்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது. இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக மோடியை தனது கட்டுப்பாட்டுக்குள் டொனால்ட் டிரம்ப் வைத்துள்ளார். இன்னும் 35 லட்சம் ஆவணங்கள் உள்ளன. மோடியை பற்றிய மறைக்கப்பட்ட பல ரகசியங்கள் டிரம்புக்கு தெரியும். அமெரிக்காவிடம் இருந்து 9லட்சம் கோடி பொருட்கள் வாங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தால் சிறு தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சீரழிக்கப்படுவார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இவ்வாறு அவர் பேசினார்.
