மேற்காசியா போர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: கார்கே குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரிஜிஜூ பதிலடி

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்காசிய போர் தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்தும்படி மாநிலங்களவை தலைவருக்கு இரண்டுமுறை கடிதம் எழுதினோம். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எல்பிஜி, எரிவாயு மற்றும் இதர பொருள்கள் விலைவாசி உயர்வால் உலகம் முழுவதும் அவதியுற்று வருகிறது. ஆனால், அவர்கள்(பாஜ) ஏன் விவாதத்துக்கு வரவில்லை? நாங்கள் எதை பரிந்துரைத்தாலும், அவர்கள் உடன்படுவதில்லை. அவர்கள் விரும்பியதை அஜென்டாவில் வைத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் வலுக்கட்டாயமாக நிறைவேற்றி, அறிவிக்கிறார்கள். இது என்ன ஜனநாயகமா? மேற்காசிய போர் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி ஏன் கலந்து கொள்ளவில்லை?” என காட்டமாக கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்து பேசினார். அப்போது, “மேற்காசிய போர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால், மக்களவை, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு இல்லாதபோதும், நெருக்கடியை சமாளிக்கவும், உலகம் முழுவதும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் எடுத்து கூறினார். கலால் வரி குறைக்கப்பட்டு சூழ்நிலையை மிக சிறப்பாக கையாண்டாலும், நீங்கள்(எதிர்க்கட்சிகள்) இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமா? இதுபோன்ற நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது” என ரிஜிஜூ பதிலளித்தார்.

ரிஜிஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கார்கே, “அனைத்து கட்சி கூட்டத்தில் உங்கள் பிரதமர் எங்கே இருந்தார்? நீங்கள் அரசாங்க பிரதிநிதியாக இருந்தீர்கள், நான் எங்கள் பிரதிநிதியை அனுப்பி இருந்தேன். உங்கள் பிரதமர் மோடி அங்கே இல்லை. உங்கள் சொற்பொழிவை கேட்க நாங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?” என மீண்டும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “எதிர்க்கட்சி தலைவருக்கு நாங்கள் எப்போதும் மரியாதை தருகிறோம். ஆனால், அவர் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வௌியேயும் பிரதமரை பற்றி தவறாக பேசுகிறார். எதிர்க்கட்சி தலைவரை மூத்தவராக நாங்கள் நினைக்கிறோம். அவர் தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை நிலைநிறுத்த தவறி விட்டார். பொறுப்பற்ற அறிக்கைகளை வௌியிடுகிறார். பிரதமரை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறார். மக்களவையில் அவரது கட்சியின்(காங்கிரஸ்) தலைவரும் அதையேதான் செய்கிறார்” என தெரிவித்தார்.

Related Stories: