மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க அரசு முன்மொழிவு? மாநிலங்கள் பாதிக்கப்படும் என காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50சதவீதம் அதிகரிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது சிறிய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தொகுதி மறுவரையரை செய்து மக்களவையின் மொத்த இடங்களை 50சதவீதம் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50சதவீதம் அதிகரிக்கவும், ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையையும் 50 சதவீதம் அதிகரிக்கவும் வகை செய்யும் ஒரு மசோதாவை பிரதமர் மோடி அரசானது வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயலுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,” மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50சதவீதம் அதிகரிக்கும் ஒரு மசோதாவை மோடி அரசு வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயலுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையையும் 50 சதவீதம் அதிகரிப்பதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிப்பது என்பது சமத்துவமானது என்ற வாதம் ஏமாற்றுத்தனமானது. மக்களவையில் பல்வேறு மாநிலங்கள் தற்போது கொண்டுள்ள எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் தென் இந்திய மாநிலங்களை பாதகமான சூழலில் தள்ளிவிடும். தென், வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சிறிய மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் வகையிலான ஒரு சட்டத்தை பிரதமர் மோடி தன்னிச்சையாக தயாரித்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: