புதுடெல்லி: 2014ல் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த நல்ல நாட்கள் விரைவில் வரும் என்ற வசனத்தை பிரதமர் மோடி பயன்படுத்தினார். அதை தற்போதுள்ள விலைவாசி உயர்வை தொடர்புபடுத்தி காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே இதுபற்றி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; மோடி அரசு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. இதன் நேரடி விளைவை இப்போது 140 கோடி இந்தியர்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல அத்தியாவசிய அன்றாடப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் விநியோகம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. சாலையோர உணவகங்களில் தேநீரின் விலை உயர்விலிருந்து. மதிய உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பாதகமான தாக்கம் முதல் விமான எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது.
900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது . ‘நெடுஞ்சாலைக் கொள்ளை’ முழுவீச்சில் நடைபெறுகிறது; பிளாஸ்டிக் பொருட்கள், எஃகு மற்றும் பீங்கான் பொருட்கள் மீது கடுமையான பாதிப்பு; விவசாயிகளுக்கான பிவிசி குழாய்களின் விலை அதிகரித்துள்ளது கட்டுமானத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அனைத்து தரப்பினரும் நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்தருணத்தில், பாஜ தலைமை அவர்களின் அவலநிலையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, பொதுமக்களைச் சுரண்டுவதிலும் நாட்டைக் கொள்ளையடிப்பதிலும் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறது. இவை நல்ல நாட்கள் இல்லை. பா.ஜவின் கொள்ளையடிக்கும் நாட்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
