புதுடெல்லி: வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதா சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்கி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான அரசின் பிடியை இறுக்கும் என குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுவதை கண்காணிக்கும் விதிகளை கடுமையாக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது, என்ஜிஓக்கள் மீதான அரசின் பிடியை மேலும் இறுக்கும் வகையில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026-ஐ ஒன்றிய பாஜ அரசு மக்களவையில் கடந்த மாதம் 25ம் தேதி தாக்கல் செய்தது.
இந்த மசோதாவை நேற்று விவாதத்திற்கு எடுத்து, நிறைவேற்ற அரசு முடிவு செய்திருந்த நிலையில், இந்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையில் பல எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில் ‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அமைப்புகளையும் குறிவைப்பதை நிறுத்துங்கள்’ என எழுதப்பட்ட பேனரை ஏந்தி அரசுக்கு எதிராக எம்பிக்கள் கோஷமிட்டனர். இப்போராட்டத்தில் சமாஜ்வாடியை சேர்ந்த டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஈ.டி. முகமது பஷீர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் ஆர்எஸ்பி கட்சியை சேர்ந்த என்.கே. பிரேம்சந்திரன் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கூறுகையில், ‘‘இம்மசோதா அரசியலமைப்பின் சரத்துகள் 14 (சட்டத்தின் முன் சமத்துவம்), 19 (ஆறு அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உத்தரவாதம்) மற்றும் 300ஏ (சட்டத்தின் அதிகாரத்தின்றி எவருடைய சொத்தும் பறிக்கப்படக்கூடாது) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது. எனவே இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இது தன்னிச்சையானது. உள்நோக்கம் கொண்டது’’ என்றார்.
காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் கூறுகையில், ‘‘ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானவையாக உள்ளன. காங்கிரஸ் இம்மசோதாவை கடுமையாக எதிர்க்கும். 2014ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தமே பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கல்வி மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் வாயிலாக பொதுமக்கள் பயனடைந்து வரும் நிலையில், அத்தகைய தொண்டு நிறுவனங்களை அரசு குறிவைக்கலாமா?. மறைந்த அன்னை தெரசா அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை பெறும் பதிவு, 2021ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.
சமாஜ்வாடி எம்பி ராம் கோபால் யாதவ் கூறுகையில், ‘‘இந்த அரசாங்கம் கொண்டுவரும் எந்தவொரு மசோதாவும் நாட்டின் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மசோதாக்களும் குறிப்பிட்ட சில முதலாளிகளுக்குச் சாதகமாகவோ அல்லது குறிப்பிட்ட சில குழுக்களின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காகவோ மட்டுமே இருந்துள்ளன’’ என்றார். சமாஜ்வாடியின் டிம்பிள் யாதவ் கூறுகையில், ‘‘இம்மசோதா பல்வேறு நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல’’ என்றார்.
இந்த மசோதா சிறுபான்மையினரை குறிவைக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த பாஜ எம்பி தினேஷ் சர்மா, ‘‘எதிர்க்கட்சிகளை போல அரசு சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினருக்கு இடையே வேறுபாடு காட்டுவதில்லை. தேசியப் பாதுகாப்பே அரசின் முதன்மையான முன்னுரிமையாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதிகள், அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கோ, ஊடக மற்றும் சமூக ஊடக தவறான தகவல்களுக்கோ, அல்லது நக்சலிசத்தை ஊக்குவிப்பதற்கோ பயன்படுத்தப்பட்டால், தேசியப் பாதுகாப்பின் நலன் கருதி அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது நிச்சயமாக அவசியமாகும்’’ என்றார்.
* nயாரையும் குறிவைக்கவில்லை
மக்களவை நேற்று காலை கூடியதும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மசோதா நேற்றைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தேசிய பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் எதிராக வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதைத் தடுப்பதை மட்டுமே இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர, எந்தவொரு மத அமைப்பையும் குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றார்.
