திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

துரைப்பாக்கம்: சென்னை திருவான்மியூரில் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயில் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு இக்கோயிலில் 11 நாள் பங்குனி திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி இரவு திருவான்மியூரின் ஊர்க்காவல் தெய்வமான ஸ்ரீ செல்லியம்மன் வீதியுலாவும், 22ம் தேதி இரவு ஸ்ரீவிநாயகர் வீதியுலாவும், 23ம் தேதி இரவு 9 மணியளவில் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம், யாகசால பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 24ம் தேதி காலை 9 மணியளவில் சந்திரசேகரர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி காமதேனுவுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு அருள்மிகு சந்திரசேகர் சந்திரபிரபை வாகனத்தில் காட்சியருளல் மற்றும் தியாகராஜர் வீதியுலா நடைபெறுகிறது.

வரும் 25ம் தேதி காலை 6 மணியளவில் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சி அருளல், 8.30 மணியளவில் பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல், அருள்மிகு தியாகராஜர் திருபவனியாக வந்து பார்த்தசாரதிக்கு அருள்கிறார். வரும் 26ம் தேதி காலை 9 மணியளவில் சந்திரசேகர் 3ம் திருபவனியாக புருஷாமிருக வாகனத்தில் புருங்கி முனிவருக்கு காட்சி அருள்கிறார். இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் சந்திரசேகர் நாக வாகனத்தில் காட்சியருளல், 10:30 மணிக்கு தியாகராஜர் 4ம் திருபவனி சந்திரனுக்கு அருள்கிறார். வரும் 27ம் தேதி காலை 9 மணியளவில் சந்திரசேகரர் தொட்டி விழா, எமதர்மனுக்கு அருளல், தொடர்ந்து இரவு 9 மணிக்கு சந்திரசேகர் விடையூர்த்தி காட்சி தருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணியளவில் சந்திரசேகரர் கடல் நீராடல், இரவு 9 மணிக்கு திருபுரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழா மற்றும் கொடியிறக்கத்துடன் வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சியருளி வீடுபேறு அளித்தல் பெருஞ்சிறப்பு விழா நடக்கிறது. பங்குனி திருவிழாவின் நிறைவு பகுதியாக, வரும் 2ம் தேதி மாலை 6 மணியளவில் சந்திரசேகரர் தெப்பத் திருவிழாவும் இரவு 9 மணியளவில் வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதியுலாவும், மறுநாள் விடியற்காலை 4.30 மணியளவில் தியாகராஜர் திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், பந்தம்பரி 18 திருநடன காட்சி பெருஞ்சிறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஸ்டாலின் குமார், உதவி ஆணையர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்று கோயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: