சென்னை, : நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையை குறைக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
* மின்னணு அல்லது சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள் (அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாதவை) போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் இதர நபர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்சான்றிதழ் பெற வேண்டும்.
* செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் ‘AI-ஆல் உருவாக்கப்பட்டது’, ‘டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது’ அல்லது ‘செயற்கை உள்ளடக்கம்’ போன்ற தெளிவான லேபிள்கள் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சமூகவலைதள பக்கங்களில் இத்தகைய தவறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டால் 3 மணி நேரத்திற்குள் அவை நீக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையை குறைக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில்வாக்குச்சாவடி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* பிஎல்ஓக்களின் ஊதியம் ரூ.12,000 ஆக உயர்வு
வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் மொத்தம் 75,037 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், அவர்களின் ஆண்டு ஊதியம் ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, சிறப்புத் திருத்த பணிகளுக்காக ரூ.2,000 சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதன்படி, 2025-26ம் ஆண்டிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) மொத்தம் ரூ.99 கோடியே 81 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
