தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியனப்பள்ளி பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் ஆனெக்கல் அருகே ஒன்ன கலசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் (எ) கோபி (40) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கும், நண்பர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் மாலை கோபால், நண்பர் சதீஷுடன் காரில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இருந்து ஆனெக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது, கர்ப்பூர் என்னுமிடத்தில் மர்ம நபர்கள் வாகனத்தை கொண்டு மோத செய்து கோபால் மற்றும் சதீஷ் ஆகியோர் முகத்தில் ஸ்பிரே தெளித்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து சதீஷை அந்த இடத்தில் விட்டு விட்டு, கோபாலை மட்டும் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆனெக்கல் போலீசில் சதீஷ் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து கோபாலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆனெக்கல் போலீசார் கடத்தப்பட்ட கோபாலை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து இரவு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, தமிழ்நாடு எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே கிரியனப்பள்ளி பகுதியில், கோபால் சடலமாக கிடந்தார். அவரை கடத்திச் சென்ற மர்ம நபர்கள், காருக்குள் வைத்து விடிய விடிய கடுமையாக தாக்கி சித்ரவதை செய்து வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர், கிரியனப்பள்ளி பகுதியில் சடலத்தை வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
இந்த கொலை கர்நாடகாவில் நடைபெற்றுள்ளதால், கடத்தல் வழக்கு ஆனெக்கல் காவல் நிலையத்தில் உள்ளதால், ஆனெக்கல் போலீசார் சடலத்தை பெற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஆனெக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மோகன்பாபு என்பவரை ஆனெக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கொலை செய்யப்பட்ட கோபாலின் நண்பர் என கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக இந்த கடத்தல் மற்றும் கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக நடந்ததா என்பது குறித்து ஆனெக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
