அத்துமீறி குடியிருப்புக்குள் நுழைந்ததை கேட்டதால் ஆத்திரம் தாக்குதலில் காயமடைந்த செக்யூரிட்டி பரிதாப பலி: டெலிவரி ஊழியர் மீது கொலை வழக்கு

சென்னை: கே.கே.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த டெலிவரி ஊழியரை தட்டிக்கேட்ட செக்யூரிட்டியை தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட டெலிவரி ஊழியர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவர் கே.கே.நர் வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் கடந்த 3ம் தேதி பணியில் இருந்த போது, பைக்கில் வந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் ஒருவர் அத்துமீறி குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார்.

இதை கவனித்த வேல்முருகன் டெலிவரி ஊழியரிடம் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்காமல் டெலிவரி ஊழியர் உள்ளே சென்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர் தனது பைக்கில் செக்யூரிட்டி வேல்முருகன் மீது மோதி காயப்படுத்தி கடுமையாக தாக்கினார். இதில் வேல்முருகன் சுயநினைவு இழந்தார். இதை பார்த்த சக செக்யூரிட்டி சுந்தரம், வேல்முருகனை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சுந்தரம் அளித்த புகாரின் படி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் தினேஷை (25) கடந்த 3ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செக்யூரிட்டி வேல்முருகன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து தினேஷ் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: