ஜிஎஸ்டி அதிகாரிகள்போல் கைவரிசை ஒன்றரை கிலோ தங்கம் அபேஸ் வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆலந்தூர்: சவுகார்பேட்டை, பெரியநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராவல்சிங் (30). கடந்த மாதம் 6ம் தேதி, இவரது பார்சல் சர்வீஸ் அலுவலக முகவரிக்கு மும்பையில் உள்ள மற்றொரு கூரியர் நிறுவனம் மூலம் ஒன்றரை கிலோ தங்க நகை பார்சல், மீனம்பாக்கம் கார்கோ விமான நிலையம் வந்தது. அப்போது கார்கோ கூரியர் நிறுவன ஊழியர் மற்றும் சவுக்கார்பேட்டை பார்சல் சர்வீஸ் ஊழியர் ஜிதேந்தர் குமார் ஆகியோர், நகை பார்சலை பெற்று பைக்கில் சவுக்கார்பேட்டை நோக்கி புறப்பட்டனர். கிண்டி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, காரில் வந்து வழிமறித்த 2 பேர், ஜிஎஸ்டி அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஒன்றரை கிலோ நகை பார்சலை பறித்து கொண்டு விசாரணைக்கு ஜிஎஸ்டி அலுவலகம் வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

இதுகுறித்து கூரியர் நிறுவன உரிமையாளர் ராவல் சிங்கிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் ஜிஎஸ்டி அலுவலகத்தில் விசாரித்தபோது அப்படி யாரும் பார்சலை பெறவில்லை என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ராவல் சிங், கிண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து சென்னை முழுவதும் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பார்சல், சர்வீஸ் மற்றும் கூரியர் சர்வீசில் பணி புரியும், 10க்கும் மேற்பட்ட ஊழியர்களின் செல்போன்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாரிடம் ஜிதேந்தர்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையில், தங்க நகை பார்சலை திருடியதாக ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ‘சென்னை விமானநிலைய கார்கோ மூலம் அடிக்கடி தங்க நகை பார்சல் வரும் விஷயத்தை குஜராத்தில் உள்ள பள்ளிக்கூட நண்பராகிய தன்ராஜ் சர்மா (30) என்பவரிடம் கூறியதாகவும் இைதயடுத்து தன்ராஜ் சர்மாவை சென்னை வரவைத்து லாட்ஜில் தங்க வைத்து நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை தீட்டியதாகவும், அதன்படி, கடந்த மாதம் 6ம் தேதி தங்க நகை பார்சல் விமான நிலையத்துக்கு வந்த தகவல் கிடைத்ததும் திட்டமிட்டபடி ஜிதேந்திரகுமார் மற்றொரு ஊழியருடன் பார்சலை கொண்டு வந்தபோது கிண்டி மேம்பாலம் அருகே தன்ராஜ் சிங் நண்பர்களுடன் வந்து ஜிஎஸ்டி அதிகாரிக்கு போல் நடித்து மிரட்டி நகை பார்சலை பறித்து தாம்பரம் சென்றது தெரிந்தது.

இதில் தன்ராஜ் சர்மா மற்றும் உடந்தையாக செயல்பட்ட ராம் ரகுநாத், கேசவராம், ரன்வீர், யுவராஜ் ஆகியோர் குஜராத்திற்கு ஒன்றரைகிலோ தங்கத்துடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கிண்டி குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் இருந்த தன்ராஜ் சர்மாவை கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராம் ரகுநாத் சிங் (30) என்பவரை தனிப்படை போலீசார் குஜராத்தில் கைது, சென்னை கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: