விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்கத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஒரு பெண் இந்த உலகத்தை, வீட்டை, நாட்டை வழி நடத்துகிறவர்களாக வரவேண்டும்.
அதுதான் என் விருப்பம். பெண் குழந்தை 19 வயது வரை தெய்வம் என்று சொல்வதுண்டு. 19 வயதுக்கு மேல் அவள் தேவதையாகிறாள் ஆக, தெய்வமும் தேவதையும் சேர்ந்த தலைமுறைதான் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரணமாக பெண்கள் சிரிக்கக் கூடக் கூடாது என்ற காலம் இருந்தது. பெண் சிரித்தால் போச்சு, முத்து உதிர்ந்தால் போச்சு என்று சொல்லுவார்கள்.
பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம அந்தஸ்து கிடைக்க வேண்டும். அன்போடு இருக்க வேண்டியது முக்கியம்தான். பெண்களை அடித்தால் திருப்பி நாலு அடியாவது போட வேண்டும் என்றுதான் சொல்வேன். வீட்டிற்கு குடித்துவிட்டு வரும் ஆண்களை உள்ளே விடாதீர்கள். எல்லாத் துறையிலும் பெண்கள் முதலிடம், படிப்பதில் முதலிடம், வேலைக்குப் போவதில் முதலிடம், ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள், ஒரு பெண் ஐஏஎஸ், ஒரு பெண் ஐபிஎஸ் இப்படி இந்தியாவில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
உங்களுடைய குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். ஆக உங்களுக்கான ஒரு அரசாங்கம், பெண்களுக்கான அரசாங்கம் வர வேண்டும். ஆண்களே நீங்கள் சற்று விலகி நில்லுங்கள், உங்களால் ஆள முடியாது. இது போதும், இனி பெண்கள்தான் ஆள வேண்டும் என்ற ஒரு நிலை வரும். இவ்வாறு அவர் கூறினார்.
