ஒவ்வொருத்தர்கிட்டையும் ரூ.2,000 ஆட்டைய போடும் பாஜ பெண் நிர்வாகி: ஆடியோ வெளியிட்டு பொறுப்பாளர் புலம்பல்

 

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் புதூரில் தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்காக பாஜ தலைமை அளித்த 5 ஆயிரத்தை நிர்வாகிகள் கேட்ட போது, தனக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டும் என பெண் நிர்வாகி லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ பின்வருமாறு: பட்டணம் புதூர் பாஜ கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர் சந்தோஷ் பேசுகிறேன். கடந்த ஒரு வருடமாக நான் சக்தி கேந்திர பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறேன்.

சக்தி கேந்திரம் சார்பில் நடத்தப்படும் தெருமுனை பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு கட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்குவதாக தகவல் கிடைத்தது. இதை பெற சூலூர் தெற்கு மண்டல் பொறுப்பாளர் சுபாஷினி செந்தில்க்கு ஒவ்வொரு சக்தி கேந்திரமும் ரூ.2000 கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட 19 சக்தி கேந்திரம் இருக்கிறோம். ஒரு சக்திக்கு ரூ.2000 கொடுங்கள். மீதமுள்ள ஐந்தாயிரத்தில் 3 ஆயிரம் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மாதப்பூர் மயில்சாமியும் மற்றும் மண்டலத் தலைவர் ஆகியோர் தகவல் தெரிவித்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பணத்திற்காக நாங்கள் வேலை செய்யவில்லை. எத்தனையோ நிகழ்ச்சிகள்,கட்சி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். எத்தனையோ செலவுகள் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். இது போன்ற செய்தி வந்தவுடன் மிகவும் வருத்தம் அளிக்கிறது. கட்சிக்கு உழைப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை தயவு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவும் ஐந்தாயிரம் கொடுத்திருக்கிறோம் என்று சூலூர் தெற்கு மண்டல சக்தி கேந்திர பொறுப்பாளரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வருகின்றனர்.

ஐந்தாயிரம் கொடுத்தால் மட்டுமே வாங்குவோம். காரணம் என்னவென்றால் கட்சியினுடைய துணைத் தலைவர்கள் பிஎல்ஏ 2 பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றிணைத்து பணம் கொடுத்தால் அவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். ஆகவே ரூ. 2000 பிடிக்காமல் ரூ.5000 தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மண்டலத்தலைவர் சுபாஷினிக்கு எதற்காக நாங்கள் 2000 கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல் பணத்திற்காக நாங்கள் வேலை செய்யவில்லை. ஆனால் தலைமை கொடுத்த பணத்தை தாருங்கள் என்கிறோம் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அவர் புலம்பியுள்ளார்.

Related Stories: