புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அரசியல் மாநாடு மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சிக்கொடியேற்றி பேசுகையில், ‘ஒருத்தர் (விஜய்) அரசியலுக்கு வந்து இருக்கிறார்.
அவர், எதற்கு வந்திருக்கிறார் என அவருக்கே தெரியல… உங்க சின்னம் என்னன்னு கேட்டா அவரோட முகத்தை காட்டுறாரு.. அறிவு சார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டும்.. நல்ல கொள்கை இருப்பவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். ஆன்றோரும் சான்றோரும் அரசியல் செய்த இடத்தில் இப்படி ஒரு நிலைமையா? ஒருத்தன் (விஜய்) எனது எச்சிலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறான்..
நான் இன்னைக்கு ஒன்னு பேசினா அதை அவன் அடுத்த நாள் மேடையில் பேசி அது அவனோட சொந்த கருத்து மாதிரி பேசுறான்.. நான் தத்துவமா சொன்னா அதை அவன் கதை மாதிரி சொல்றான். வட இந்தியர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. வெற்றியையும் தோல்வியையும் நாங்கள் சமமாகவே கருதுகிறோம். நாங்கள் தோற்றால் மக்களுக்காக தோற்போம்.
இனியும் தோற்போம், ஆனால் ஒருபோதும் பணம் கொடுக்க மாட்டோம். 0.5% வாக்கு வைத்திருப்பவர்களுக்கே பேரம் பேசுகிறார்கள் என்றால், 8% வைத்துள்ள எங்களிடம் பேரம் பேச மாட்டார்களா? ஆனால் மக்கள் தான் எங்கள் கூட்டணி, அதுதான் வலுவான கூட்டணி என்றார். தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளுக்கு சமமாக 14 ஆண்-பெண் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
