நச்னு நாலு கேள்வி: விஜய் கூட்டணிக்கு வந்தால் கெமிஸ்ட்ரி வேலை செய்யாது: – பாஜ மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா

1. அதிமுகவை பாஜ கபளீகரம் செய்துவிடும் என்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?
பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சியையும் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியையும் கபளீகரம் செய்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. அதற்கு வலுச் சேர்க்க இரண்டு விஷயங்கள் சொல்கிறார்கள். 1990களில் பாஜ தான் அங்கு பெரிய கட்சியாக இருந்தது. எப்போதும் பாஜ, நிதிஷ் குமாரின் கட்சிக்கு இணையாகவோ அல்லது அதைவிட பெரிய கட்சியாகவோ இருந்திருக்கிறது. அதனால் அங்கு கபளீகரம் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் 1980 லிருந்து கூட்டணியில் இருந்தோம்.

பால் தாக்கரே இறந்த பிறகு அவரது மகனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. அங்கு பாஜவும் சிவசேனாவும் சம பலத்தில் தான் இருந்தனர். இந்த இரண்டையும் ஒப்பிடுபவர்கள் தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடந்துவிடும் என்று சொல்கிறார்கள். நாங்கள் எப்போதும் திமுக மற்றும் அதிமுகவுடன் ஜூனியர் பார்ட்னராகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அந்த மாநிலங்களில் இருப்பது போன்று பாஜ அவ்வளவு பெரிய கட்சியாக தமிழகத்தில் மாறவில்லை. இந்தக் கூட்டணியை சிறுமைப்படுத்துவதற்காக, அங்கு செய்தது போன்று இங்கு செய்து விடுவோம் என்று வாக்காளர்களை திசைதிருப்ப இதுபோன்ற ஒப்பீடு செய்கிறார்கள்.

2. தமிழிசை, அண்ணாமலை தலைவர்களாக இருந்தபோது பாஜவின் செயல்பாட்டில் இருந்த தீ, இப்போது நயினார் நாகேந்திரன் தலைமையில் உள்ளதா? ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். அதனால் அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள், இவர்கள் செய்யவில்லை என்று ஒப்பீடு தவறானது. பாஜ தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிற ஒரு கட்சி. அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றார்போல் இந்த மாதிரியான தலைமை தேவைப்படுகிறது என சிந்தித்துத் தலைவர்களை நியமனம் செய்வார்கள். அதனால் அந்த ஒப்பீட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது.

3. ஒருவேளை அதிமுக பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தால், ஆட்சியில் பங்கு என்கிற கருத்தில் எந்த அளவுக்கு பாஜ உறுதியாக உள்ளது? இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பாஜவுக்கு எது சவாலாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்கு போட்டியிடப் போறீங்க? இதற்கான பதிலை முடிவு செய்ய வேண்டியது தலைவர்களும் தலைமையும். இதற்கு பதில் சொல்வதற்கு எனக்கும் மாநிலத்தில் எவருக்குமோ உரிமை கிடையாது. தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை அனைத்தும் தேசிய அளவில்தான் முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு சவாலாக இருக்கப்போவது எதிர் முகாமில் உள்ள 21 கட்சிகளின் கூட்டணி தான்.

அது ஒரு பிரமாண்டமான கூட்டணி. 2019 தேர்தல் தொடங்கி 2021 மற்றும் 2024 என மூன்று தேர்தல்களில் ஒரே கூட்டணியாக நின்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் கூடுதலாக சில கட்சிகள் இணைந்துள்ளார்கள். எதிர்முகாமில் திமுக மீது சரியாக ஆட்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அந்த வலிமையான கூட்டணிக்கு எப்போதும் பெரிய பவர் இருக்கிறது. எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்க போவது அவர்களின் பிரமாண்டக் கூட்டணி தான்.

2021 தேர்தலில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தேன். அப்போது அதிமுக கூட்டணியில் இருந்ததால் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட வேலை செய்தேன். தமிழிசை போட்டி போடுவது போன்ற நிலைமை ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடமாக வேளச்சேரியில் களப்பணியாற்றியுள்ளேன். அதனால் இந்த முறை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

4. விஜய் கட்சி பாஜவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறதா? பதில்: திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் திமுகவிற்கு எதிர் கருத்துடையவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. பல இடங்களில் எங்களுடைய மாநில தலைவர் சொல்லியுள்ளார். அது நாம் தமிழர், தவெக என மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் அனைவரும் இணைந்தால் திமுகவை எளிதாக வீழ்த்திவிடலாம். ஆனால் அது 1977ம் ஆண்டு இருந்த ஜனதா கட்சி போன்று ஆகிவிடக்கூடாது.

எங்களுக்கும் விஜய்க்கும் கொள்கை முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்து இருந்தால் கூட அனைவரும் சேரும்போது அந்த கெமிஸ்ட்ரி சரியாக வேலை செய்யாதோ என்ற எண்ணம் உள்ளது. அதனால் இப்போதைக்கு அது நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது போல் எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி ஏற்பட்டால் அது திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் காரணத்திற்காகத்தான் இருக்கும். ஆனால் நிச்சயமாக அது ஒரு கொள்கைக் கூட்டணியாக இருக்க வாய்ப்பில்லை

Related Stories: