தொகுதி பங்கீடு எங்கு நடந்தா என்ன? என்னை தூக்கி பிடிக்குறவங்களுக்கு சீட் வாங்கி தர்றது என்னோட கடமை…ஜி.கே.வாசனுக்கு திடீர் பாசம்

 

சேலத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: என்டிஏ-அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருக்கிறது. அதற்கான நேரம், காலம் உள்ளது. எங்கள் அணிக்குள் இதுவரை வராத கட்சிகள் வந்து சேரும் என கருதுகிறேன். விஜய்யின் தவெக வருமா என கேட்கிறீர்கள், அதை கூற எனக்கு ஜோசியம் எல்லாம் சொல்ல தெரியாது.

இந்தியாவில் பெரிய கட்சி பாஜ. தமிழ்நாட்டில் பெரிய கட்சி அதிமுக. அதனால், அவர்கள் இருவரும் கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி, யாருக்கு எத்தனை சீட் என்பதை கூறுவார்கள். இந்த தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தால் என்ன?, சென்னையில் நடந்தால் என்ன?, எல்லாம் சுமூகமாக நடந்தால் போதும். அப்படி சுமுகமாக தான் நடக்கும். தலைவர் மூப்பனார், பிறகு என்னை தூக்கி சுமந்து கொண்டிருக்கும் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக சீட்களை பெற்றுத்தருவேன்.

இப்படி என்னை தூக்கி சுமக்கும் தொண்டர்களுக்கு சீட் பெற்றுக் கொடுப்பது எனது கடமை. அந்த கடமையை மனதில் வைத்துக் கொண்டு தான், மேலவை உறுப்பினர் பதவிக்கு கூட எந்த அழுத்தமும் தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘காஸ் விலை கஷ்டத்தை மக்கள் ஏற்கணும்’

மகளிர் தின நாளில் இல்லத்தரசிகள் பாதிக்கும் வகையில் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பற்றி ஜி.கே.வாசனிடம் கேட்டதற்கு, `துரதிஷ்டவசமாக உலகில் போர் சூழ்ந்திருக்கிறது. அதனால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சில கஷ்ட, நஷ்டங்களை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். இருப்பினும் சிறந்த ராஜதந்திர முறையில் பிரதமர் செயல்படுவார்,’’ என்றார்.

Related Stories: