துபாய்: துபாய் ‘மெரினா’ அடுக்குமாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கவசத்தால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. வளைகுடா பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. ஈரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
துபாய் மெரினா பகுதியில் உள்ள 90 மாடிகளைக் கொண்ட ‘23 மெரினா’ என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மீது, நேற்றிரவு வான் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் விழுந்தன. அமீரக வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது, அதன் உடைந்த பாகங்கள் இந்த கட்டிடத்தின் முகப்பு பகுதியில் விழுந்து தீப்பற்றியது. இதில் கட்டிடத்தின் 23வது மாடியில் புகைமூட்டம் ஏற்பட்டு வெளிப்புறப் பகுதியில் தீ பரவியது. இந்த விபத்தில் 23 மெரினா குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
எனினும், அதே இரவு அல் பர்ஷா பகுதியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள் தாக்கியதில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த துபாய் சிவில் டிபென்ஸ் குழுவினர் கட்டிடத்தில் இருந்தவர்களை முன்னெச்சரிக்கையாக வெளியேற்றி தீயைக் கட்டுப்படுத்தினர். பின்னர் நிலைமை சீரானதை அடுத்து பொதுமக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, ஒரே நாளில் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 டிரோன்கள் கண்டறியப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. தற்போது அமீரகம் போர் காலத்தில் இருப்பதாக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
