சென்னை : தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநிலங்களவை எம்.பி. ஆகிறார். 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதையடுத்து, ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக வேட்பாளராக சுதீஷ் போட்டியிடுவார் என பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து எல்.கே.சுதீஷ் வழிபட்டார். இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் சுதீஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தேமுதிக 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேமுதிக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகிறது. 2011-16 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது கூட தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கவில்லை. 2013ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது தேமுதிக. இரு முறை மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்த அதிமுக, அதை நிறைவேற்றவில்லை. இதையடுத்து திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகிறது.
