ஒருங்கிணைந்த நில ஆவணம், பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை ஆகிய இணையவழி சேவைகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

 

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ மற்றும் ‘ பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை‘ ஆகிய இணையவழி சேவைகளை தொடங்கி வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு , சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து, நில உரிமைதாரர்களுக்கு ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையையும், இணையவழியில் ஒரு புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை’ (History of Patta Transfer) என்ற சேவையையும் இன்று (04.03.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை, சேப்பாக்கம் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்தில் தொடங்கி வைத்தார். இச்சேவைகளின் விவரம் பின்வருமாறு:-

ஒருங்கிணைந்த நில ஆவணம் (Integrated Land Record): நில உரிமையாளர்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் சமர்பிக்கும் பொருட்டு, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் அவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மூன்று ஆவணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வழங்கும் பொருட்டு, கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி நில உரிமைதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நில ஆவணம் என்ற புதிய ஆவணம் வழங்கிட G.O.(Ms.) No. 613 Revenue and Disaster Management Department நாள்: 01.10.2021 அரசாணை வெளியிடப்பட்டு, தேசிய தகவலியல் மையத்தால் இந்த ஆவணம் வடிவமைக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்படுகிறது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை (History of Patta Transfer) : நில ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக கணினிபடுத்தப்பட்டு, 2014–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரையில் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, இம்மென்பொருள் மூலமாகவே நிலம் தொடர்பான பட்டா மாறுதல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணம் உருவாக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2024 – 2025 ஆண்டு கூட்டத் தொடரில் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ‘பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழில், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் குறிப்பிடுவது போல, 2016–ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட கால வரையரைக்குள் தனியார் நிலங்கள் தொடர்பாக நில ஆவணங்களில் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்ட பட்டா மாற்றங்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பொது மக்களுக்கு இணையம் வழியே ஆவணமாக வழங்கும் பொருட்டு அரசால் G.O.(Ms). No. 309 Revenue and Disaster Management [Survey and Settlement II(2)] Department, dated: 16.08.2024 மற்றும் G.O (Ms). No. 415 Revenue and Disaster Management Department [Survey and Settlement II(2)] Department] Dated: 14.10.2024 ஆகிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, தேசிய தகவல் மையம் மூலமாக இந்த ஆவணம் வடிவமைக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு இந்சேவை துவக்கி வைக்கப்படுகிறது.

நில உரிமையாளர்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தலைப்பினை தேர்வு செய்து தங்களது நிலம் சார்ந்த விவரங்களான மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் மற்றும் விவரம் தேவைப்படும் தேதியினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், பட்டா மாற்ற விவரக் கட்டணமான ஆண்டு ஒன்றுக்கு ரூ. 50/– வீதம் மற்றும் செயலாக்க கட்டணமாக ரூ. 60/– ஆகியவற்றை இணையம் வாயிலாக இத்தொகையினை செலுத்தி விண்ணப்பம் செய்தவுடன், ‘முந்தைய பட்டா மாறுதல் விவர அறிக்கை’ நில உரிமைதாரரின் ‘Citizen Portal’ கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். இதனை நில உரிமையாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் . கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதி. பெ.அமுதா, இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் மதி. இரா. கஜலட்சுமி இ.ஆ.ப. மற்றும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: