முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

 

சென்னை: திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் உள்ளது. அந்த அளவுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைத்துள்ள திமுக தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கியமாக காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி எண்ணிக்கை குறித்து இரு தரப்பும் வெளிப்படையாக எதையும் கூறாமல் இருந்த நிலையில், இறுதியாக 25 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்ததும் விமர்சனத்துக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், திமுகவோ கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்து. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021ல் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா மீண்டும் தேர்வாகிறார். 1996, 2002, 2007, 2014, 2020ம் ஆண்டை தொடர்ந்து திருச்சி சிவா 6வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாகிறார்.

 

Related Stories: