டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. கிறிஸ்டோபர் திலக் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வருகிறார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
தமிழ்நாடு உள்பட 5 மாநில ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். சத்தீஸ்கர் – புலோ தேவி நேதம்; ஹரியானா – கரம்வீர் சிங் பௌத்; ஹிமாச்சலப் பிரதேசம் – அனுராக் ஷர்மா; தமிழ்நாடு – எம்.கிறிஸ்டோபர் திலக்; தெலங்கானா – அபிஷேக் மனு சிங்வி; வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோ நியமனம்
தமிழகத்தில் மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) செயலாளரான கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையினரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி, இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக (In-charge) நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் மாநிலங்களவையில் ரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை ஒரு புதிய மற்றும் சுறுசுறுப்பான முகத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் கிறிஸ்டோபர் திலக் இடம்பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் அவர் ஆற்றிய கடினமான பணிக்கான வெகுமதியாக இந்த வாய்ப்பு அமையலாம். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் என்பதாலும் இவரது தேர்வு கட்சிக்குச் சாதகமாக அமையும்.
காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை சீட்டிற்காகப் பல மூத்த தலைவர்கள் போட்டியிட்டாலும், கிறிஸ்டோபர் திலக்கின் பெயருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, இளைஞர்களைக் கவரும் வகையில் இவரைப் போன்ற ஒருவருக்கு வாய்ப்பளிப்பது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் எனத் தொண்டர்கள் நம்புகின்றனர்.
