மீனவர் நலத்துறை சார்பில் 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 100 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு கடற்பாசி உற்பத்தி பூங்கா, மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் சில்லரை விற்பனையகம், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு வளப்படுத்தப்பட்டுள்ள மூன்று கடலோர மீனவ கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் என 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 665 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், வளமாவூரில் உள்ள 54 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கடற்பாசி உற்பத்தி பூங்கா, மயிலாடுதுறை மாவட்டம், பழையார் மீனவ கிராமத்தில் 26 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம்,  திருநெல்வேலி மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பொது வண்ணமீன் காட்சியகம் மற்றும் வண்ணமீன் சில்லரை விற்பனையகம், கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதியில் 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் மீன் பண்ணை;

காலநிலைக்கு ஏற்றவாறு மீனவ கிராமங்களை வளப்படுத்தும் வகையில், கடலூர் மாவட்டம் – சி. புதுப்பேட்டையில் செயற்கை பவளப்பாறை மற்றும் மீன் உலர்தளம், செங்கல்பட்டு மாவட்டம் – பரமன்கேணியில் வலைபின்னும் கூடம் மற்றும் மீன் ஏலக்கூடம், திருவள்ளூர் மாவட்டம்- பசியவரத்தில் கட்டுபாட்டு அறையுடன் கூடிய பயிற்சி மையம் ஆகியவை தலா 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று மீனவ கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள்; என மொத்தம் 100 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் 8 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

தூத்துக்குடி மாவட்டம் – தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணி, தருவைக்குளம் மீனவ கிராமத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மீன்பிடித் துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணி, வாணியக்குடி மீனவ கிராமத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மீன்பிடித் துறைமுகம், திருநெல்வேலி மாவட்டம்- பெருமணல் கிராமத்தில் 19 கோடியே 33 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணி, செங்கல்பட்டு மாவட்டம் – நெம்மேலி குப்பத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி;

தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சம்பைப்பட்டிணம், காரங்குடா, பிள்ளையார் திடல், அடைக்கந்தேவன், கொள்ளுக்காடு, செந்தலைவாயல், அன்னன் நகர், புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், சோமநாதபட்டினம், கழுமன்குடா, வல்லவன்பட்டினம், கணேசபுரம், செம்பியன்மகாதேவி, மல்லிப்பட்டினம், மனோரா மற்றும் காந்தி நகர் ஆகிய மீனவ கிராமங்களில் வடிகால் கால்வாய்கள் மற்றும் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி;

மயிலாடுதுறை மாவட்டம் – பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, சின்னாங்குடி மீன் இறங்குதளத்தை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, வெள்ளக்கோயில் மற்றும் தாழம்பேட்டை மீனவ கிராமங்களில் தலா 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி, தூத்துக்குடி மாவட்டம் – வேம்பார் மீனவ கிராமத்தில் தற்காலிகமாக வேம்பார் மீன் இறங்குதளத்தை 11 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி; என மொத்தம் 665 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 25.02.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மீனவர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளான கல்வி, திருமணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகைகளை உயர்த்தியும், கடலில் மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவர் குடும்பத்தின் துயர நிலையினை கருத்திற்கொண்டு, காப்பீடு மற்றும் நிவாரணத் தொகைகள் கிடைக்கும் வரை அவரது வாரிசுதாரருக்கு, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் மூலம் மாதம் ரூ.2,000/- உதவித் தொகை, என 4 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவர் முனைவர் அ.ஜோசப் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் முனைவர் கே.வி.முரளிதரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: