டிரெக்கிங் செல்பவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேத்துமடை கேம்ப் ஹவுஸ் விரைவில் திறப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் டிரெக்கிங் செல்பவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேத்துமடை கேம்ப் ஹவுஸ் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மலையேற்றம் செய்பவர்களுக்காகவும், இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘டிரெக் தமிழ்நாடு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வனத்துறையினர் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் எளிய, மிதமான, கடினமான என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள சுமார் 40 மலையேற்றப் பாதைகளில் டிரெக்கிங் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மலையேற்றம் செய்ய அதிகளவிலான நபர்கள் ஆர்வம் காட்டுவதால்,டிரெக் தமிழ்நாடு மூலம் டிரெக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மலையேற்றம் செய்பவர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மலையேற்றம் செய்பவர்கள் இயற்கை சூழலில் இரவு நேரம் தங்கி ரசிக்கும் வகையில், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகேயுள்ள சேத்துமடை பகுதியில் ‘கேம்ப் சேத்துமடை’ என்ற தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மலையேற்றம் செய்பவர்கள் ஒரு கேம்ப் ஹவுஸில் 3 பேர் வீதம் தங்கும் வகையில் 5 கேம்ப் ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஓட்டுநர்கள் தங்குவதற்காக ஒரு கேம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி, படுக்கை வசதி,கழிவறை வசதி, சோலார் மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கேம்ப் ஹவுஸ்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. கேம்ப் ஹவுஸில் தங்குவதற்கான கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும், www.trektamilnadu.com என்ற வலைதளம் மூலம் முன்பதிவு செய்து இங்கு தங்கலாம் என டிரெக் தமிழ்நாடு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: