ஆண்டிபட்டியில் ரூ.3.50 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மர் ரூ.2.80 கோடியில் கோயில் புனரமைப்பு பணிகள்

*காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தடையற்ற மின்சாரம் வழங்க ரூ.3.50 கோடி மதிப்பிலான புதிய மின்மாற்றி மற்றும் ரூ.2.80 கோடியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் முடிவடைந்த பல்வேறு திட்டப்பணிகளை திறந்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகத்தில் இதுவரை 10 மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றி செயல்பட்டு வந்தது.

பொதுமக்களுக்குத் தடையின்றி மின்சாரம் கிடைத்திடும் வகையில், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட 16 மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை முதலமைச்சர் காணொலியில் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நேரில் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி, உதவி செயற்பொறியாளர் ஜெயசந்திரன், உதவி பொறியாளர்கள் சரவணன், தீபா, திமுக பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அகோபிலராயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, இக்கோயிலை ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயற்பொறியாளர் ராஜராஜன், ஆய்வாளர் கார்த்திக்கேயன், உதவி பொறியாளர் சதீஷ், செயல் அலுவலர் சுதா மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Related Stories: