×

கச்சநத்தத்தில் 4 பேர் கொலை வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: கச்சநத்தம் கொலை வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராம கோயில் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. இதில், கடந்த 28.5.2018 அன்று நள்ளிரவில் ஒரு தரப்பினர் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை சரமாரியாக தாக்கினர். வீடுகளில் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கினர்.

இதில், ஆறுமுகம்(65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்(34) ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். சிகிச்சையில் இருந்த தனசேகரன்(32) ஒன்றரை ஆண்டுக்கு பின் இறந்தார். இந்த கொலை குறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கச்சநத்தம் மற்றும் ஆவாரங்காட்டைச் சேர்ந்த 33 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இடையில் வழக்கிலுள்ள 2 பேர் உயிரிழந்தனர். கருப்பையா என்பவர் தலைமறைவானார். வழக்கில் உள்ள 3 சிறுவர்களைத் தவிர்த்து மற்ற 27 பேர் மீதான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில், கடந்த 2022ல் தீர்ப்பளித்த நீதிமன்றம் 27 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், 27 பேருக்கும் மொத்தமாக ரூ.13,28,400 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

சிவகங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, 27 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், பூர்ணிமா ஆகியோர், மேல்முறையீடு செய்துள்ளவர்களில் இளையராஜா மட்டும் விடுதலை செய்யப்படுகிறார். மற்ற 26 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தண்டனை வழங்கியது சரி என்றும், இந்த தண்டனையை உறுதி செய்தும் நேற்று உத்தரவிட்டனர்.

Tags : Kachanatham ,Madurai ,High Court ,festival ,Tirupachetti, Sivaganga district ,
× RELATED 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296 கோடி மதிப்பு கட்டிடங்கள் திறப்பு