×

1.50 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள் கோவையில் மேற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு: இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

சூலூர்: கோவையில் இன்று திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடக்கிறது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவிலான பாக முகவர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் மாநாடு கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி அருகே திறந்தவெளி மைதானத்தில் இன்று (வெள்ளி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார்.

இம்மாநாட்டில், திமுக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பாக முகவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார்.

மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதற்கான திடல் அமைக்கும் பணியை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கண்காணித்து வருகிறார்.

மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் அன்பகம் ரவி, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் நேற்று மாநாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

Tags : Western Zone DMK Agents Conference ,Coimbatore ,Chief Minister ,M.K. Stalin ,Sulur ,DMK ,Tamil Nadu ,
× RELATED 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296 கோடி மதிப்பு கட்டிடங்கள் திறப்பு