- சட்டமன்ற உறுப்பினர்
- செய்யாறு
- திருவண்ணாமலை
- முனுசாமி
- பெரிய செங்காடு
- செய்யாறு தாலுகா
- திருவண்ணாமலை மாவட்டம்
- இருசப்பன்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பெரிய செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (40), விவசாயி. இவரது உறவினர் இருசப்பன் (51). இருவருக்கும் இடையே நில பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 15.5.2014 அன்று பெரிய செங்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த முனிசாமியிடம், இருசப்பன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருசப்பனுக்கு ஆதரவாக, அவரது தம்பி பெருமாள் (45) மற்றும் உறவினர்களான முன்னாள் எம்எல்ஏ ஜெயராமன் மகன்கள் மதியழகன் (35) நந்தகோபால் (28), சுதாகர் (32), துரைமுருகன் (30), முன்னாள் எம்எல்ஏவான கமலக்கண்ணன் (37) ஆகியோர் சரமாரியாக முனுசாமியை கத்தியால் தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி பொன்னியையும் தாக்கியுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.
புகாரிபேரில், போலீசார் கொலை வழக்குப்பதிந்து, மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகர், கமலக்கண்ணன், துரைமுருகன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை மாவட்ட நீதிபதி மதுசூதனன் விசாரித்து முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரர்கள் மதியழகன், நந்தகோபால், சுதாகர், துரைமுருகன் மற்றும் உறவினர்கள் இருசப்பன் பெருமாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கமலக்கண்ணனின் தந்தை ஜெயராமன் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவாக 2006ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி காலத்தில் அவர் உயிரிழந்ததால், 2009ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது மகன் கமலக்கண்ணன் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று 2009- 2011 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
