நான் எந்த துரோகமும் செய்யவில்லை: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இணைந்து ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமிக்கு நான்கரை ஆண்டுகளும் முழு ஒத்துழைப்பை அளித்தேன். அதிமுகவில் இரட்டை தலைமையைக் கொண்டு வந்ததே எடப்பாடி பழனிசாமிதான். என்னை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதே எடப்பாடி பழனிசாமிதான்.

இருவரும் இணைந்தே கையெழுத்திட்டு முடிவுகளை எடுக்க முடியும் என மாற்றம் கொண்டு வந்ததும் பழனிசாமிதான். மோடி கூறியதால்தான் நான் துணை முதலமைச்சர் பதவியை அப்போது ஏற்றுக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. நடைபெற்ற 11 தேர்தலில் ஒரு தேர்தலில் கூட பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போதும் அதே நிலைமைதான். ஜெயலலிதா சிறை சென்றபோது என்னையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவியை ஏற்க மறுத்தேன். என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ஏற்க வைத்தனர்.

நான் எந்த துரோகமும் செய்யவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூறினால் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். ராமநாதபுரத்தில் போட்டியிட என்.டி.ஏ என்னை வற்புறுத்தியதால் தான் போட்டியிட்டேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. டிடிவி தினகரன் மீது உயர்ந்த.. உச்சபட்ச மரியாதை வைத்துள்ளேன்; அவர் பேசுவதற்கு மேலாக என்னால் பேச முடியும்; அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன். எந்த நிலையிலும் நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று கூறினார்.

Related Stories: