நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்பட வடகிழக்கில் பனிப் புயல் வீச தொடங்கியதை அடுத்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்து தவிர அனைத்து வாகன போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்தார். கடும் பனிப்பொழிவுடன் தீவிர பனி புயல் வீசுதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில், குறிப்பாக நியூயார்க் நகரில் சக்திவாய்ந்த பனிப்புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால், நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. நியூயார்க் நகரின் பல பகுதிகளில் பனி குவிந்துள்ளது. கடும் காற்றினால் பனி பறப்பதால் சாலைகளில் பார்வைத் திறன் வெகுவாகக் குறைந்து, வாகனப் போக்குவரத்து ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி நகரில் அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற அனைத்து தனியார் வாகனங்களும் சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பனி அகற்றும் வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சாலைகளைச் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ‘ஸ்னோ டே’ (Snow Day) விடுமுறை அறிவிக்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
பயணத்துறையைப் பொறுத்தவரை முக்கிய விமான நிலையங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டு நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்கின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பாஸ்டன், கனெக்டிகட், டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா மாகாணங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
