பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு

பாட்னா: பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளிடையே வன்முறை போக்கை நிறுத்த இம்முடிவு என துணை முதலமைச்சர் விளக்கம் அளித்தார். பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், நெரிசலான பொது இடங்கள் அருகே இறைச்சி, மீன்களை விற்பது உணர்வுகளைப் பாதிப்பதோடு, சூழலின் புனிதத்தைக் கெடுக்கிறது என தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் புதிய அரசின் முயற்சியாக, பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன்களை வெளிப்படையாக விற்பனை செய்வதற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் பொது அமைதியைக் காக்கும் நோக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்வதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதும், குழந்தைகளின் மன நலனில் எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் இந்தத் தடையின் முக்கிய நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுக் பழக்கவழக்கங்களில் தலையிடுவது அரசின் நோக்கமல்ல என்று குறிப்பிட்ட துணை முதல்வர், ஆனால் அதே நேரத்தில் பொது இடங்களின் தூய்மை மற்றும் புனிதத்தன்மை கெடாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமானது எனவும் வலியுறுத்தினார். யாருடைய உணர்வுகளும் புண்படாத வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும் இந்த விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Stories: